/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/222_33.jpg)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்நிலையில் 'புஷ்பா 2 - தி ரூல்' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இப்பூஜை விழாவில் இயக்குநர் சுகுமார், தயாரிப்பாளர் ரவிசங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தானா கலந்துகொள்ளவில்லை. அல்லு அர்ஜுன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில், 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராகப் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ராஷ்மிகா மந்தானா வேறொரு படப்பிடிப்பில் உள்ளதால் 'புஷ்பா 2' படத்தின் பூஜை விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளோம் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Follow Us