
அல வைகுந்தபுரமலோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா என்றொரு படத்தில் நடித்து வருகிறார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து இப்படத்தின் ஷூட்டிங் முடங்கியது. தற்போது திரைப்பட ஷூட்டிங்கிற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல நடிகர்கள் தங்கள் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு தீவிரமாக லொக்கேஷன்களை பார்த்து வருகின்றது.
இந்நிலையில், இப்படப்பிடிப்புக்கான இடத்தை பார்க்க இந்த படக்குழுவினர் சமீபத்தில் தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ‘குண்டால’ நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றனர். இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டார். பின்னர், இதுபற்றிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார். இதையடுத்து, கரோனா விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்த சென்றதால் இந்த படக்குழுவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஆதிலாபாத் நேரேட்டிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.