டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வீடு அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும், மேலும் நடவடிக்கை எடுக்க தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதில் மனு இன்னும் தயாராகவில்லை எனக் கூறி பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுக்கொண்டார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் ஏன் இன்னும் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி கேட்டதோடு இது சரியான நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்தார்கள். இதற்கு ஒருங்கிணைந்த பதில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதால் இந்த முறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மனுவிற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த தொகையை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.