தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். 1993-ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 60 படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில், தமிழ் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை, நடனம் ஆட வரவில்லை உள்ளிட்ட சில விமர்சனங்கள் இவர் மீது எழுப்பப்பட்டன. பிறகு அதனை சரி செய்துகொண்டு இன்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'வலிமை' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்துவருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அஜித்தின் வெற்றி பயணத்தை மையப்படுத்தி கூறுவது போல் ஒரு குட்டி கதையை அவரது மேலாளர் சுரேஷ் சந்த்ரா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கதையின் மையக்கரு, "எல்லாரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. நீங்கள் எதைச் செய்தாலும் அதை விமர்சனம் செய்யும் மக்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள், விமர்சனங்களால் திசை திரும்பி விடாதீர்கள்" என்பதாகும். இப்பதிவின் கேப்ஷனில் 'பேரன்போடு அஜித்' எனக் குறிப்பிட்டுள்ளார்.