அஜித்... தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் தூரம் குறைவு என்றாலும், இவருக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம். அதிலிருந்து விலகிச் சென்று கொண்டே இருப்பவர். ஆனாலும், இவருக்கு தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் ஆளுமைகளாக விலங்கிய கலைஞருடனும் ஜெயலலிதாவுடனும் உறவு இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith meets kalaignar (1).jpg)
கலைஞருக்கும் அஜித்திற்குமான உறவு கிட்டத்தட்ட அஜித்தின் திருமணத்தில் ஆரம்பித்தது. இவரது திருமண வரவேற்பில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். கலைஞரும் நேரில் சென்று அஜித்தை வாழ்த்தினார். பின்னர் அஜித் திரையுலகில் வளர்ந்தபோது ஓரிரு முறை ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அஜித்குமார் சந்தித்தார்.
திரைக்கலைஞர்களுக்கு நிலம் ஒதுக்கிய கலைஞரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித்குமார் மேடையில் பேசியபோது... '60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'அய்யா... சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கிறாங்க அய்யா. எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் அய்யா' என்று பேசினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. ரஜினிகாந்த் அஜித்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அஜித் இப்படி பேசியதற்கு ஒரு சேர எதிர்ப்புகளும், ஆதரவும் கிளம்பின. ஒரு முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் இப்படி பேசியது குறித்து 'அஜித் ஜெயலலிதா விசுவாசி' என்றும், அவர் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்ற அளவுக்கு பேசிக்கொண்டனர்.
பின்னர் இந்த கடும் கொந்தளிப்பிற்கு மத்தியில் பிரச்சனை குறித்து விளக்கமளிக்க ரஜினிகாந்தும், அஜித்குமாரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்... 'எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலைஞர் பெருந்தகை அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் எனினும் எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர். இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி அஜித் விளக்கமளித்தார், கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின் பல ஆண்டுகள் கழித்து கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்த அஜித் ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். தமிழ் திரைப்பட நாயகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சோ எழுத்தோ வந்தால், அதில் அன்று அந்த மேடையில் அஜித் பேசியது நினைவு கூறப்படுகிறது.
Follow Us