இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நடிகர்களின் படம் குறித்த அப்டேட் வெளியாகும்போது, ‘வலிமை’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேள்வியெழுப்புவது வழக்கம். ஆனால், தயாரிப்புத் தரப்பு படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. இது, அஜித் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் படத்திற்குத் துளியும் சம்பந்தம் இல்லாத நபர்களிடமும் ‘வலிமை’ பட அப்டேட் குறித்துக் கேட்க ஆரம்பித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், மொய்ன் அலியிடம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், நடிகர் அஜித் இதுகுறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் இதுபோன்ற செயல்கள் தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்குவதாகவும், படம் குறித்த அப்டேட் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் வெளியாகும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘சினிமா உங்களுக்குப் பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா தொழில்’ எனக் குறிப்பிட்டுள்ள அஜித், 'நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும். அதை மனதில் கொண்டு செயல்படுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.