ajith

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த புயலில் பாதிப்படைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். நிதி வழங்கியவர்கள் பட்டியலை வெளியிட்டபோது அதில் நடிகர் அஜித் 15 லட்சம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பலர் பாராட்டினார்கள், கொடுத்த நிதியை கூட ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் கொடுத்திருக்கிறார் அஜித் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், சேலத்தை சேர்ந்த விநியோகஸ்தர் 7ஜி சிவா நடிகர் அஜித் கஜா புயலுக்கு நிவாரண நிதியாக 15 மட்டும் கொடுக்கவில்லை 5கோடி கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தரான சிவா, ரஜினி 2.0 படத்தின் சேலம் உரிமத்தை வாங்கியுள்ளார். மேலும் அஜித்தின் தீவிர ரசிகர் இவர். அஜித் நடித்த வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து கட்டமராயுடு என்று எடுக்கப்பட்டது. இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டார்.

Advertisment

அஜித்தின் விஸ்வாசம் படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனால் எந்த விதமான கொண்டாட்டங்களுடன் விஸ்வாசத்தை வெளியிடலாம் என்று அஜித் ரசிகர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதில் கலந்துகொண்டு பேசிய 7ஜி சிவா, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அஜித் 15 லட்சம் கொடுத்தார் என்று சொல்வார்கள். ஆனால், அவர் 5 கோடி வரை கொடுத்திருக்கிறார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும். அஜித் சார் எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார் என்று கூறினார்.

Advertisment

இவ்வாறு 7ஜி சிவா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அஜித் கூறியதாக, அஜித் தரப்பிலிருந்து, ”என்னுடைய பங்களிப்புகள் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் எனது செய்தி தொடர்பாளர் மூலம் அதிகாரப்பூர்வமான கடிதம் மூலமாகவே வெளியிடப்படும். இதுபோன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் பொய்யான தகவல்கள் வெளிவருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.