நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பாலிவுட்டில் பிங்க் என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இதில் அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார். டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்திற்கு விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த வருடத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிரபல திரையரங்கம் லீ கிராண்ட் ரெக்ஸில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரயரங்கில் படங்கள் வெளியாகுவதே கௌரவமாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் தோன்றும் காட்சியில் ஆடிப் பாடி, திரையை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் அந்தத் திரை சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து திரையை மாற்ற 7000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களிடம் திரையரங்க நிர்வாகம் கோரியுள்ளது. மேலும் இனி இந்த திரையரங்கில் தமிழ் படங்களை வெளியிடவும் மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதன் பின் இந்த செயலை கண்டித்து பிரான்ஸ் திரையரங்க விநியோகஸ்தர் அமைப்பு, அஜித் ரசிகர்கள் திரையை கிழித்த வீடியோவை பதிவிட்டு கண்டித்துள்ளது. இந்த செயலை சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.