Skip to main content

"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி 

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

நடிகர் அஜித், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, சினிமா கலைநிகழ்ச்சிகள், விருது விழாக்கள் போன்றவற்றிலும் கலந்துகொள்ள மாட்டார். தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்ததிலிருந்து ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. ஆனால், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாளிலும் அதன் வெற்றியிலும் 50வது நாள் கொண்டாட்டத்திலும் இது மீண்டும் நிரூபணமானது.
 

ajith votes



அஜித்தின் ரசிகர்கள், அஜித்தைப் பார்த்துவிடவேண்டுமென்ற ஆர்வத்திலும் தவிப்பிலும் இருப்பவர்கள். இதனால், விமான நிலையத்திற்கோ படப்பிடிப்பிற்கோ எங்கு அஜித் வருவதாக தகவல் கிடைத்தாலும் அங்கு கூடிவிடுவார்கள். ஒரு முறை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அஜித் வர, அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி, பின்னர் நிலைமை சகஜமாக நெடுநேரம் ஆனது. படப்பிடிப்பில் தன்னைக் காண வரும் ரசிகர்களை முடிந்த அளவு சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர் அஜித். ஆனால், சமீப காலமாக அவரது படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத் அல்லது வேறு வெளியூர்கள், வெளிநாடுகளில்தான் நடக்கின்றன. இதனால் அஜித்தைக் காண அவரது ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைவது அரிது. எங்காவது அஜித், காரில் செல்வதைப் பார்த்தால் வண்டியில் அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் செல்வதுண்டு. ஒரு முறை, இப்படி அதிவேகமாக ரசிகர்கள் பின்தொடர்வதைப் பார்த்த அஜித், தனது காரை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றார்.

 

kanchana AD



இப்படி அஜித்தை எங்கு பார்க்க முடியும், எப்படி பார்க்க முடியும் என்று அவரது தீவிர ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நடிகர் அஜித், திருவான்மியூர் பகுதியில் குடியிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் திருவான்மியூர் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருவது வழக்கம். இன்றும் அவர் எப்படியும் அங்கு வருவார் என்று தெரிந்துகொண்ட ரசிகர்கள், வாக்குப்பதிவு தொடங்கும் நேரமான 7 மணிக்கு முன்பாகவே அங்கு கூடத்தொடங்கினர். போலீஸ் பாதுகாப்பும் அந்த வாக்குச்சாவடிக்கு அதிகமாகவே இருந்தது.


 


 

சுமார் ஏழரை மணியளவில் நடிகர் அஜித்தின் கார் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர தொடக்கப்பள்ளியில் வந்து நிற்க, கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த ஆரம்பித்தனர். செய்தியாளர்களும் ரசிகர்களும் காரை சூழ்ந்துகொள்ள அஜித் கதவைத் திறந்து இறங்கினார். அங்கிருந்த காவல்துறையினர் அவரையும் ஷாலினியையும் உள்ளே அழைத்துச் சென்றனர். ரசிகர்களைப் பார்த்த அஜித் புன்னகையுடன் நடந்தார். ரசிகர்களின் கூட்டத்திலும் அவர்களது உற்சாகக் குரலிலும், அஜித் வாக்களித்து திரும்பச் செல்லும் வரை அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது. வாக்களித்து முடித்ததும் முதலில் அஜித்தை காருக்கு அழைத்துச் சென்று சேர்த்து, பிறகு ஷாலினியை அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். 

"தல எங்க மிஸ் ஆனாலும் இங்க மிஸ் ஆக மாட்டார். கண்டிப்பா பாத்துரலாம்னுதான் வந்தோம். அதே மாதிரி பாத்துட்டோம்" என்று குதூகலமாகக் கூறினார் அஜித் ரசிகர் ஒருவர். கூடிய கூட்டத்தால் அந்த வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பு அளிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.      

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.