Skip to main content

"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி 

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

நடிகர் அஜித், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, சினிமா கலைநிகழ்ச்சிகள், விருது விழாக்கள் போன்றவற்றிலும் கலந்துகொள்ள மாட்டார். தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்ததிலிருந்து ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. ஆனால், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாளிலும் அதன் வெற்றியிலும் 50வது நாள் கொண்டாட்டத்திலும் இது மீண்டும் நிரூபணமானது.
 

ajith votes



அஜித்தின் ரசிகர்கள், அஜித்தைப் பார்த்துவிடவேண்டுமென்ற ஆர்வத்திலும் தவிப்பிலும் இருப்பவர்கள். இதனால், விமான நிலையத்திற்கோ படப்பிடிப்பிற்கோ எங்கு அஜித் வருவதாக தகவல் கிடைத்தாலும் அங்கு கூடிவிடுவார்கள். ஒரு முறை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அஜித் வர, அங்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி, பின்னர் நிலைமை சகஜமாக நெடுநேரம் ஆனது. படப்பிடிப்பில் தன்னைக் காண வரும் ரசிகர்களை முடிந்த அளவு சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர் அஜித். ஆனால், சமீப காலமாக அவரது படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத் அல்லது வேறு வெளியூர்கள், வெளிநாடுகளில்தான் நடக்கின்றன. இதனால் அஜித்தைக் காண அவரது ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைவது அரிது. எங்காவது அஜித், காரில் செல்வதைப் பார்த்தால் வண்டியில் அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் செல்வதுண்டு. ஒரு முறை, இப்படி அதிவேகமாக ரசிகர்கள் பின்தொடர்வதைப் பார்த்த அஜித், தனது காரை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றார்.

 

kanchana AD



இப்படி அஜித்தை எங்கு பார்க்க முடியும், எப்படி பார்க்க முடியும் என்று அவரது தீவிர ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நடிகர் அஜித், திருவான்மியூர் பகுதியில் குடியிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் திருவான்மியூர் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருவது வழக்கம். இன்றும் அவர் எப்படியும் அங்கு வருவார் என்று தெரிந்துகொண்ட ரசிகர்கள், வாக்குப்பதிவு தொடங்கும் நேரமான 7 மணிக்கு முன்பாகவே அங்கு கூடத்தொடங்கினர். போலீஸ் பாதுகாப்பும் அந்த வாக்குச்சாவடிக்கு அதிகமாகவே இருந்தது.


 


 

சுமார் ஏழரை மணியளவில் நடிகர் அஜித்தின் கார் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர தொடக்கப்பள்ளியில் வந்து நிற்க, கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த ஆரம்பித்தனர். செய்தியாளர்களும் ரசிகர்களும் காரை சூழ்ந்துகொள்ள அஜித் கதவைத் திறந்து இறங்கினார். அங்கிருந்த காவல்துறையினர் அவரையும் ஷாலினியையும் உள்ளே அழைத்துச் சென்றனர். ரசிகர்களைப் பார்த்த அஜித் புன்னகையுடன் நடந்தார். ரசிகர்களின் கூட்டத்திலும் அவர்களது உற்சாகக் குரலிலும், அஜித் வாக்களித்து திரும்பச் செல்லும் வரை அந்தப் பகுதி பரபரப்பாக இருந்தது. வாக்களித்து முடித்ததும் முதலில் அஜித்தை காருக்கு அழைத்துச் சென்று சேர்த்து, பிறகு ஷாலினியை அழைத்துச் சென்றனர் காவல்துறையினர். 

"தல எங்க மிஸ் ஆனாலும் இங்க மிஸ் ஆக மாட்டார். கண்டிப்பா பாத்துரலாம்னுதான் வந்தோம். அதே மாதிரி பாத்துட்டோம்" என்று குதூகலமாகக் கூறினார் அஜித் ரசிகர் ஒருவர். கூடிய கூட்டத்தால் அந்த வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பு அளிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.      

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.