“நீங்களும் தானம் செய்ய வேண்டும்”- அஜய் தேவ்கன் வேண்டுகோள்!

ajay devgn

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திடீரென இந்தியாவில் உயரத்தொடங்கியுள்ள கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு மாறியுள்ளது இந்தியா.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கரோனாவால் அதிக மக்கள்பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக அறியப்படும் மும்பையின் தாராவியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியிலிருந்து மட்டும் 1,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தற்காலிகமாக மருத்துவமனை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனைக்காக தனது அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக, நடிகர் அஜய் தேவ்கன் பங்களிப்பு செய்துள்ளார். 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், இரண்டு வென்டிலேட்டர்களையும் அளித்துள்ளார் அஜய் தேவ்கன்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஜய், "கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கான மையப்பகுதியில் தாராவி இருக்கிறது. மாநகராட்சியின் உதவியோடு எண்ணற்ற குடிமக்களும், தன்னார்வ அமைப்புகளும் களத்தில் அயராது உழைத்து வருகின்றன. தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்களையும், சுகாதாரப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக நாங்கள் 700 குடும்பங்களுக்கு உதவுகிறோம். நீங்களும் தானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ajay devgan
இதையும் படியுங்கள்
Subscribe