தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள் குமார் தயாரிக்கிறார்.
கடந்த மாதத்தின் மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவந்தது. இந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஜி. அருள் குமார் கூறுகையில், "எங்கள் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தனது திறமையான இயக்கத்தின் மூலம் திட்டமிட்ட காலகட்டத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்து அசத்தியுள்ளார். விரைவில் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்" எனக் கூறினார்.