Skip to main content

"எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் சமூகத்தில் இல்லை" - ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

jjrjr

 

மலையாள மொழியில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழில் ரீமேக் செய்படுகிறது. நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குகிறார். மேலும் இயக்குநரே தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படம் குறித்து பேசும்போது....

 

"பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம். அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்தபோது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் 'க/பெ ரண்சிங்கம்' படத்தில் நடித்துகொண்டிருந்தபோது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன். அவளுக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் ஆர்.கண்ணன் அவர்களுடன் எனக்கு முதல் படம். மிகச் சிறந்த இயக்குநர். அருமையான படக்குழு. படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருக்கிறது. படமும் மிகச்சிறப்பாக வருகிறது" என்றார்.

 

vdsgasdga

 

இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படம் குறித்து கூறும்போது... "நம் கலாச்சாரத்தில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது. இன்றைய நவநாகரீக உலகிலும் பெண்களின் அடிப்படை உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. இதையெல்லாம் முகத்தில் அறைந்தாற்போல், அருமையாக சொல்லியிருந்தது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம். பலர் இப்படத்தை தமிழில் இயக்க முயன்றார்கள். தரமான படங்களை இயக்கியிருந்ததால் என்னை நோக்கி இப்படம் வந்தது. நகரங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் ஃபாஸ்ட்புட் கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் எந்நேரமும் சமையலறையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் கதை காரைக்குடியில் நடப்பதாக அமைத்தேன். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காரைக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் படப்பிடிப்பு மிக எளிமையாக இருக்கிறது. படத்தின் ஆன்மா கெடாமல் சமூகத்திற்கு தேவையானதை சொல்வதே குறிக்கோள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்