தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே விளையாட்டு வீராங்கனை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுக்கதையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறை ஜெயசீலன் தவப்புதல்வி இயக்குகிறார். 888 நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில், சாந்தி சௌந்தரராஜன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் எனக் கூறப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவான 'கனா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே நடித்திருந்தால், இத்தகவலின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை. இது குறித்துப் பரவும் தகவலில் உண்மையில்லை. இதுபோன்ற புரளிகளை நம்ப வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.