Aishwarya RaiTouches Mani Ratnam's Feet At Ponniyin Selvan 2 Event

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர். அந்த வகையில் நேற்று (25.04.2023) மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் மணிரத்னம், விக்ரம், ஏ.ஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Advertisment

அப்போது மணிரத்னம் ஐஸ்வர்யா ராய் பற்றி கூறுகையில், "இயக்குநர்கள் மிகவும் சுயநலவாதிகள், அவர்களுடைய படத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். நான் ஐஸ்வர்யா ராயின் மீது நிறைய நேசம் வைத்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் அவரை அணுகுவேன். அவரும் அதற்கு ஓகே சொல்லிவிடுவார்" என்றார். மணிரத்னம் இப்படி பேசியதும் நெகிழ்ச்சியடைந்தஐஸ்வர்யா ராய், மணிரத்னம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படம் மூலம் தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதனால் எப்போதும் மணிரத்னம் மீது பெரிய மரியாதை வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.