agathiya 3rd single released

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அகத்தியா’.வேல்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் பிப்ரவரி 28 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் ‘செம்மண்ணு தானே’ வெளியாகியுள்ளது. இப்பாடல் குறித்து இயக்குநர் பா விஜய் கூறியதாவது, “இந்தப் பாடல் வெறும் இசையல்ல, இது நமது நிலத்தின் ஆழமான வேரூன்றிய கலாச்சார பாரம்பரியத்தின் வழியாக ஒரு பயணம். எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தும் அபாரமான மருத்துவ மூலிகைகளை நமக்குத் தந்த, நம் மண்ணின் சாரத்தை வெளிப்படுத்த விரும்பினேன்.

இது குறித்து நான் யுவனுடன் பகிர்ந்து கொண்டேன், அவர் அதை கமர்ஷியலாகவும், கலாச்சார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஒரு மெல்லிசையாக உருவாக்கித் தந்தார். நமது மண்ணின் ஆற்றலால் மனித குலத்திற்குப் பங்காற்றிய ஞானிகளுக்கும், குணப்படுத்துபவர்களுக்கும் இப்பாடல் காணிக்கையாகும்” என்றார்.