Skip to main content

உலக அரங்கில் மீண்டும் ஒரு தமிழ் சினிமா!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

உலக சினிமாவை பார்த்து தமிழ் ரசிகர்கள் வியந்த காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி, தமிழ்த் திரைப்படங்கள் உலக மேடைகளில் முத்திரை பதிக்கும் காலத்தை பார்த்து வருகிறோம். நூறு திரைப்பட விழாக்களுக்கு மேல் சென்று முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற டூலெட், உலகம் முழுக்க பயணித்து விருதுகளை வென்று கொண்டிருக்கும் பரியேறும் பெருமாள், உலக அரங்கங்களில் கைத்தட்டல்களைக் குவித்த காக்கா  முட்டை, விசாரணை படங்களின் வரிசையில் தற்போது இன்னொரு தமிழ் திரைப்படம், உலகத் திரைப்பட விழாக்களில் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருக்கிறது. 
 

gnanacherukku

 

 

தரணிராசேந்தரன் இயக்கத்தில் ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஞானச்செருக்கு' திரைப்படம் இருபதிற்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது. லண்டன், நியூயார்க், இங்கிலாந்து, ரஷ்யா, வெனிசுலா என பல நாடுகளில் திரையிடப்பட்டு நெகிழ்ச்சியான விமர்சனங்களையும் கைத்தட்டல்களையும் வென்றுள்ளது ஞானச்செருக்கு. 
 

குறிப்பாக வெனிசுலாவில் நடைபெற்ற FICOCC உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளியமைப்பு, சிறந்த இசை, சிறந்த ப்ரொடக்சன் டிசைன் என ஐந்து விருதுகளையும், கொல்கத்தாவில் நடந்த Beyond Earth International Film Festival ல் Best Debut Feature Film என்ற விருதையும் பெற்றுள்ளது இத்திரைப்படம். இந்த ஒவ்வொரு திரைப்பட விழாவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் என்பதிலிருந்து இந்த விருதுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். 
 

முழுக்க முழுக்க இளைஞர்களால், சினிமாவில் முதன்முறை கால்பதிக்கும் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது 'ஞானச்செருக்கு'. ஓவியர் வீரசந்தானம் இத்திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு கோப்பிதுரைசாமி, படத்தொகுப்பு மகேந்திரன், இசை சக்கரவர்த்தி, பாடல்கள் நெய்தல், காட்சி நிறம் லோகேஷ்வரன், Graphics அரவிந்த் மற்றும் சிறப்பு சப்தம் கண்ணன். இவர்கள் அனைவரும் குறும்படங்கள் மூலம் இணைந்த இளம் கூட்டணி. குறும்படங்களைத் தொடர்ந்து இப்போது சினிமாவிலும் கால் வைத்துள்ள இவர்கள், முதலில் படத்திற்கான தயாரிப்பாளரை பலகாலமாக தேடியுள்ளனர். ஏமாற்றமும் தாமதமும் மட்டுமே பதிலாக கிடைக்க, க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் கூட்டுநிதியின் மூலம் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதிலும் சில சிக்கல்கள் வர, படத்தில் வேலை செய்தவர்களின் மாத சம்பளங்களில் ஒரு பகுதி, நண்பர்கள், உறவினர்களின் பங்களிப்பு என ஒரு தொகை சேர, அதையே முதலீடாக வைத்து நான்கு வருட உழைப்பில் படத்தை எடுத்து முடித்துள்ளனர். 
 

குறும்படங்கள் மூலம்தான் நான் திரைமொழியை கற்றுக்கொண்டேன் எனக்கூறும் இயக்குனர் தரணிராசேந்திரனிடம் பேசினோம். 
 

"நம்ம மக்களுக்கு பொதுவா ஒரு மனநிலை இருக்கு. விருதுகள் வாங்குற படம்னா இப்படித்தான் இருக்கும்னு. அத மொத்தமா உடைச்சுரும் ஞானச்செருக்கு. ஏன்னா நவீன பாணிலதான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. நிச்சயம் விறுவிறுப்பான ஒரு படமா இது இருக்கும். இது வரை தமிழ் சினிமா வகுத்த பாணியை ஞானச்செருக்கு உடைக்கும். அதேசமயம் அழுத்தமான கருத்தியல வெகுஜன மக்கள் கொண்டாடக்கூடிய நவீன திரைமொழில பேசுற படமாவும் இருக்கும். அதனாலதான் கடந்த மாதம் அமெரிக்கால நடந்த ஒரு திரைப்பட விழால ஞானச்செருக்கு படத்துக்கு தனித்துவமான கதை எனும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுச்சு" என்றார். 
 

ஞானச்செருக்கு எதைக் குறிக்கிறது, எதைப்பற்றிய படமாக இது இருக்கும் என்ற கேள்விக்கு "கலைஞனும் கலையும் அதிகாரத்திற்கு மேல். அதிகாரத்திற்கு வீழாத, படைப்பின் விடுதலையை தேடும் படைப்பாளியின் உணர்வை விறுவிறுப்பாக, நவீன பாணியில் பேசும் ஞானச்செருக்கு" என்கிறார் தரணிராசேந்திரன். 
 

dharani

 

 

வெளிநாட்டு திரையிடல்களில் மொழித் தடையையும் தாண்டி குடும்பம் குடும்பமாக வந்து ரசித்துப் பார்த்து பாராட்டியுள்ளனர். ஒரு தமிழ்த்திரைப்படம் நாடு, கண்டம், மொழியைத் தாண்டி உலகின் பல்வேறு மூலைகளில் கொண்டாடப்படுவது நிச்சயம் தமிழ் சினிமாவின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் தான். தமிழ்நாட்டின் வாழ்வியல் தன்மையை, நம் வாழ்வை, கலையை, அரசியலை பேசும் ஒரு படத்தை உலகமெங்கும் மக்கள் பார்த்து அங்கீகரித்து வருகிறார்கள். நாம் எப்போது பார்ப்பது?
 

"திரைக்கு கொண்டுவரும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நிச்சயம் திரைக்கு வந்துவிடும். நிச்சயம் உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்" என்கிறார் இயக்குனர் தரணிராசேந்திரன். 
 

நேர்மையான, தரமான படைப்புகளை தமிழ் ரசிகர்கள் எப்போது அங்கீகரிக்காமல், கொண்டாடாமல் விட்டதில்லை. நீங்க சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.