தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு குறுகிய காலத்திலே இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். படங்கள் மட்டுமல்லாது இசை நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார் அனிருத். அந்த வகையில் பிரான்ஸ், லண்டன் உள்ளிட சில நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள அனிருத் இதுவரை தமிழ்நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியதில்லை.
இந்நிலையில் அனிருத் தனது அடுத்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் வெளியிட்டுள்ள பதிவில், "10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் எதிர்பார்த்த நாள் இறுதியாக வந்துவிட்டது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கும். நம்ம சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இந்த ஆண்டு வருகிற செம்ப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வருகிறோம். நம் தமிழ்நாட்டில் எங்களுடைய முதல் இசை நிகழ்ச்சி இது. விரைவில்" எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக அனிருத் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.