பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் ஆதித்யா நாராயண். இவர் பாலிவுட்டில் பாடகராகவும் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது ஷாருக்கான் நடித்த டான் படத்திலிருந்து ‘ஆஜ் கி ராத்...’ பாடலை பாடிக்கொண்டிருந்தார்.
அப்போது மேடைக்கு கீழே அவரை சுற்றியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அவரது செல்ஃபோனால், ஆதித்யா நாராயண் காலை இடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா, தன் கையில் வைத்திருந்த மைக்கால் அவரை அடித்துவிட்டு, அந்த செல்போனை வாங்கி ஆவேசமாகத் தூக்கி எறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு கீழ் பலரும் ஆதித்யா நாரயணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.