actress shwetha menon complaint against online money laundering group

Advertisment

இந்தி மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்வேதா மேனன். தமிழில் சிநேகிதியே, சாது மிரண்டா, நான் அவன் இல்லை-2உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் ஆன்லைன் மூலம் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "நான் கணக்கு வைத்துள்ள வங்கியிலிருந்து பேசுவதாக ஒரு செல்போன் அழைப்பு எனக்கு வந்தது. அதன் பின் எனது செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் கொடுக்கப்பட்ட லிங்க்கில் கேட்கப்பட்ட விவரங்களைக் கொடுத்தேன். சில நிமிடங்களில் எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.57,636 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த மோசடி கும்பல் ஸ்வேதா மேனன் மட்டுமல்லாமல் 40 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ஒரு தனியார் வங்கியைச் சேர்ந்த 40க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பான் எண், ஓடிபி உள்ளிட்ட விபரங்கள் கேட்டு ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பியுள்ளது. இந்த லிங்க் மூலம் கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கிலும் பணம் திருடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.