
90களில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரேவதி, கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ’மித்ர மை ஃப்ரெண்ட்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இதுவரை மொத்தம் நான்கு படங்களை அவர் இயக்கியுள்ள நிலையில், ஐந்தாவது படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
ரேவதி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் நடிகை கஜோல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'தி லாஸ்ட் ஹுர்ரா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிலைவ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படம் குறித்து நடிகை ரேவதி கூறுகையில், ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவித்தார். மேலும், இப்படத்தில் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடிகை கஜோல் நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கான கதையை எழுத தொடங்கியபோது நடிகை கஜோல்தான் தனது மனதில் முதலில் வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மும்பை கட்டிங்’ என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு பாகத்தை ரேவதி இயக்கியிருந்த நிலையில், தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகிவருகிறது.