Skip to main content

“குற்றவாளிகளுடன் தன்னைச் சம்மந்தபடுத்தி பேச வேண்டாம்”- நடிகை பூர்ணா வேண்டுகோள்!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

poorna

 

மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பூர்ணா, கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்டவருடன் செல்போனின் மூல அறிமுகமாகியுள்ளார். அன்வர் அலி, கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் நடிகை பூர்ணாவிடம் தெரிவித்துள்ளார்.

 

அதன்பிறகு அன்வரின் குடும்பத்தினர் எனச் சொல்லி, அன்வரின் புகைப்படமென டிக்டாக் பிரபலத்தின் புகைப்படத்தைக் காட்டி நடிகை பூர்ணாவை திருமணம் செய்துவைக்க கேட்டுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு சந்தேகமடைந்த பெற்றோர், சி.சி.டி.வி. வீடியோவை ஆரய்ந்தபோது அதில் அவர்கள் வீடு, கார் ஆகியவற்றை மொபைலில் படம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்தி பூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் நால்வருக்கும் கரோனா டெஸ்ட் எடுத்த பிறகு நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நடிகை பூர்ணா குறித்து பல வதந்திகள் பரப்பபட்டன. இந்நிலையில் அதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தக் கடினமான சூழலில் எனக்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றி. என்னுடைய விவகாரம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான உண்மைக்கு மாறான தகவல்கள் பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த மிரட்டல் கும்பலையும், முக்கியக் குற்றவாளியையும் எனக்குத் தெரியாது. குற்றவாளியோடு என்னைத் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

போலிப் பெயர்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் மூலம் எங்களிடம் திருமணம் குறித்துப் பேசி எங்களை அவர்கள் ஏமாற்றியதால் எங்கள் குடும்பத்தினர் அவர்கள் மீது புகாரளிக்க முடிவு செய்தனர். நாங்கள் சட்டப்படி நடவடிக்கைக்காக போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்ததாலேயே அவர்களின் மிரட்டலுக்கு ஆளானோம். அவர்களின் நோக்கம் என்ன என்று எங்களுக்கு அப்போதும் தெரிந்திருக்கவில்லை, இப்போதும் தெரியவில்லை.

 

தற்போது, என்னுடைய புகாரை ஏற்று கேரள போலீஸார் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். எனவே, விசாரணை முடியும் வரை என்னுடைய, என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

நம்முடைய நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு முடிந்ததும் ஊடகங்களை நிச்சயமாக சந்திப்பேன். என் வாழ்வின் மிகவும் கடினமான ஒரு கட்டத்தில் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் நின்ற என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

http://onelink.to/nknapp

 

என்னுடைய வழக்கின் மூலம், இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களை எதிர்த்துப் போராடும் என்னுடைய சகோதரிகள் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தி ரியல் கேரள ஸ்டோரி... இளைஞரின் உயிரைக் காக்க ஒன்று திரண்ட மலையாளிகள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
People who saved Kerala youth's life by collecting blood money in Saudi Arabia
அப்துல் ரஹீம்

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கோடம்புழா. இப்பகுதியைச் சேர்ந்த தம்பதி முல்லா முஹம்மது - பாத்திமா. இவர்களது மகன் அப்துல் ரஹீம். இவரின் தந்தை இறந்த நிலையில், அப்துல் ரஹீம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவுஸ் டிரைவர் விசாவில் சவூதி அரேபியா சென்றார். அப்போது அவரது வயது 26. வேலை தேடிச்சென்ற அப்துல் ரஹீமுக்கு சவூதியின் ஒரு வீட்டில் வாகனம் ஓட்டும் பணியுடன், அந்த வீட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி சிறுவனைப் பராமரிக்கும் பணியும் கொடுக்கப்பட்டது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் சேர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது அப்துல் ரஹீமின் வேலையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எப்போதும் போல மாற்றுத்திறனாளி சிறுவனை அப்துல் ரஹீம் காரில் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ட்ராபிக் சிக்னல் விழுந்ததால் கார் சிறிது நேரம் நின்றுள்ளது. ஆனால், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் காரை இயக்க சொல்லி அடம்பிடித்துள்ளார். உடனே, கார் ஓட்டுனர் அப்துல் ரஹீம் சிக்னல் மீறிச் செல்ல கூடாது என சிறுவனிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனாலும், சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிறார். மீண்டும் சிக்னலை மீறக் கூடாது எனக் கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதனைக் கவனிக்காத அப்துல் ரஹீம் மறுபடியும் வண்டியை ஒட்டிச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுவனின் பேச்சு சத்தம் கேட்காத நிலையில், அப்துல் ரஹீம் பின்பக்கம் திரும்பி பார்த்து அதிர்ந்து போயுள்ளார். சிறுவன் காரிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்துல் ரஹீம் நடந்த சம்பவத்தைக் கூறி, அரேபியாவில் வேலை செய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீர் என்பரிடம் உதவிக்கேட்டுள்ளார். அவர் கொடுத்த ஐடியாவின் படி பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீம்மை கட்டிப்போட்டு சிறுவனை தாக்கியதாக முதலாளியிடம் நாடகம் ஆடினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மனம் இறங்கி வந்த சிறுவனின் பெற்றோர்  இழப்பீடாக பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர். அதன் இந்திய மதிப்பு 34 கோடி ரூபாய் ஆகும். அதனையும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்தால் அப்துல் ரஹீம் உயிர் தப்பிக்கலாம் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் சவுதி அரேபியால் பணிபுரியும் மலையாளிகள் என அனைவரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செயலியை உருவாக்கி நிதி திரட்டினர். அத்துடன், சிறுவனின் மரணத்திற்கு அப்துல் காரணம் இல்லை எனவும் அது தற்செயலான ஒன்று எனவும் விளக்கமளித்திருந்தனர். இதனிடையே, குறுகிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மகனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும், 18 ஆண்டுகளுக்கு பிறகு மகனை காண இருப்பதாக அப்துல் ரஹீமின் தாய் பாத்திமா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது ஒரு உண்மையான கேரளக் கதை. இதன்மூலம் வகுப்புவாதத்தால் உடைக்க முடியாத சகோதரத்துவக் கோட்டை கேரளா என்பது உறுதியாகி உள்ளது. உலகத்தின் முன் கேரளாவை பெருமைப்படுத்திய இந்த நோக்கத்திற்காக அனைத்து நல் உள்ளங்களையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வெளிநாடுவாழ் மலையாளிகளின் பங்கு, இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமைக்காக நாம் ஒருமனதாக முன்னோக்கிச் செல்வோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' போன்ற படத்தைக் கொண்டாடும் பாஜகவிற்கு கேரள முதல்வர் பதிலடி கொடுத்திருப்பதாக கேரள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரியல் கேரள ஸ்டோரி இதுதான் என அப்துல் ரஹீமுக்கு மக்கள் செய்திருக்கும் உதவியைக் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடியைத் திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.