1990-களின் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்து வந்த ரோஜா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின், அரசியலில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்த ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், அக்கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு அக்கட்சியினர் பலரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தனர். அதில், ரோஜா செய்த உதவியானது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
திருப்பதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி படித்து வந்த புஷ்பகுமாரி என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், தாய், தந்தை இல்லாததால் இம்மாணவிக்கு மேற்படிப்பைத் தொடருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து அம்மாணவியைத் தத்தெடுத்துள்ள ரோஜா, அவருக்கான கல்விச்செலவைத் தான் முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.