Skip to main content

“இந்தியத் தயாரிப்பாளர், பாகிஸ்தான் இயக்குநர்; இருவராலும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்” - நடிகை குற்றச்சாட்டு

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

actress Mehreen Shah complaint against indian director raj gupta and Ahsan ali Zaidi

 

பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மெஹ்ரீன் ஷா. இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த இயக்குநர் அஹ்சான் அலி ஜைதி ஆகியோரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன் எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

 

மேலும் அவர் பேசுகையில், "நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் எஹ்சான் அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தா ஆகியோருடன் ஒரு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. அவர்களின் கோரிக்கையை நான் ஏற்க மறுத்ததால், அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தாவுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது.

 

ஆனால், அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்களா என்பது தெரியவில்லை. இந்தியத் தயாரிப்பாளர் ராஜ் குப்தா என்னிடம் நெருங்கிப் பழக முயன்றார். ஆனால், நான் திட்டவட்டமாக மறுத்ததால், அவரது பாணி முற்றிலும் மாறிவிட்டது. அவர் எனக்கு உணவு கூட கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின் போது எனது உடல்நிலை மோசமடைந்தது. இன்னும் அவர் என்னைப் பார்க்கவில்லை.

 

இதையெல்லாம் சொல்வதன் நோக்கம் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே. நான் அஹ்சான் அலி ஜைதியுடன் முதல் முறையாக வேலை செய்கிறேன். இதே போல் வேறு எந்த நடிகைகளும் இவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமுடன் உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவர்களுடன் எந்த நடிகையாவது பணிபுரிய விருப்பப்பட்டால் அவர்களை நான் எச்சரிக்க வேண்டும். 

 

அலி ஜைதி மற்றும் ராஜ் குப்தா ஆகியோர் இரவில் தங்கள் அறைகளில் பாலியலில் ஈடுபட அழைக்கிறார்கள். தற்போது பாகிஸ்தானுக்குத் திரும்ப டிக்கெட் கூட வழங்கப்படவில்லை. இருவரின் செயல்பாடுகளால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இவர்களை மீறி டிக்கெட் பதிவுசெய்தால் அதனை கேன்சல் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்திலும் உள்ளேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.