Skip to main content

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை; ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பு

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

actress grace antony and saniya iyappan issue

 

மலையாளத்தில் நவீன் பாஸ்கர் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சட்டர்டே நைட்'. இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.

 

அப்போது அங்கு ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். அக்கூட்டத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளதாக நடிகைகள் இருவரும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 


இது தொடர்பாக நடிகை சானியா ஐயப்பன், "நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோம். அக்கூட்டத்தில் சிலர் என் சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள், கூட்டத்தின் காரணமாக அவருக்குப் எதிர்வினையாற்ற கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற பெண் வெறுப்பு செயலை நானும் சந்தித்தேன்" என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளத் திரையுலகில் முதல் படம் - வரலாற்று சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
manjummel boys collect worldwide rs.200 crore

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையடுத்து வந்தனர். 

manjummel boys collect worldwide rs.200 crore

இந்த நிலையில் 25ஆவது நாளைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக தற்போது புது சாதனையைப் படத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக டொவினோ தாமஸ் நடித்த 2018 படம் ட்ரூ.175 கோடி வசூலித்து முதல் இடத்திலிருந்த நிலையில் அதன் சாதனையை முறியடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது மோலிவுட் திரையுலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதுவரை மலையாளத்தில் பிரேமலு -ரூ.115 கோடி, லூசிஃபர் - ரூ.127 கோடி, புலிமுருகன் - ரூ.152 கோடி, 2018 - ரூ.175 கோடி, மஞ்சும்மல் பாய்ஸ் - ரூ.200 கோடி ஆகிய படங்கள் அதிக வசூலித்த படங்களாக டாப் 5 இடத்தில் இருக்கிறது. இதில் பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்கள் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

Next Story

தமிழில் பிரேமலு - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
premalu tamil release update

கிறிஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத 9 ஆம் தேதி வெளியான மலையாள படம் பிரேமலு. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 8 ஆம் தேதி வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழிலும் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது. இப்படம் மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரேமலு படத்தின் தமிழ் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.