கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ஒயிலாட்டம் என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சார்மிளா. இதனை தொடர்ந்து தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, பெரியம்மா போன்ற தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். இதன்பின் காதல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் சார்மிளா பாத்ரூமில் தவறி விழுந்ததில் இடுப்பிற்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து நடிகை சார்மிளா கூறுகையில், “குளியல் அறையில் தவறி விழுந்ததில் இடுப்புக்கு கீழ் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டது. பண நெருக்கடி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க முடியாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
அதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஏனென்றால் எனது குடும்பத்தினர் மருத்துவ துறையில்தான் இருந்தார்கள். அதனால் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து வீடு திரும்பிவிட்டேன். என்னால் நன்றாக நடக்க முடிகிறது. நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. கவர்ச்சி வேடங்களை ஏற்பதில்லை. அம்மா, அக்கா, அண்ணி போன்ற கண்ணியமான வேடங்களை ஏற்கிறேன்” என்றார்.