actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார்சினேகன் மீதுபதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.