Skip to main content

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார் சினேகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
show cancelled details on april 19

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.