கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் புனித் ராஜ்குமார் உடல் யஷ்வந்த்பூர் அருகே உள்ள காண்டீவரா ஸ்டூடியோ அலுவலகத்தில் அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி, " அவரை ஒருமுறை கூட சந்தித்தது இல்லை. படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். மறைவுக்குப் பின்புதான் அவர் எவ்வளவு தங்கமான மனுஷன் என்று தெரிகிறது. அவரை சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.