
2013ஆம் ஆண்டு கதிர் நடிப்பில் வெளியான ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இப்படத்திற்கு முன்பு பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனோடு இணைந்து கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருந்தார்.

இதனிடையே நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த படங்கள் பொல்லாதவன், கொடிவீரன் ஆகியவை ஆகும். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கினார். இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதையடுத்து சூரியை வைத்து ஒரு படம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன், காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் நேற்று ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவரது மறைவு, தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் சுகுமாரன் மறைவையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடித்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தி உருக்கமுடன் தனது ஃபேஸ்புக் வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தவர். நான் உண்ணும் சினிமா சோற்றின் ஒவ்வொரு பருக்கையிலும் அவன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. தாங்க முடியாத துயரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.