சிவாஜி கணேசன் மறைந்து இன்றுடன் 24 வருடங்கள் ஆகிறது. இதனையொட்டி சென்னை அடையாறு பகுதியில் உள்ள சிவாஜி கனேசன் நினைவு மண்படத்தில் சிவாஜி சிலைக்கு பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன் விக்ரம் பிரபும் அஞ்சலி செலுத்தினார். இவர்களைத் தவிர்த்து நடிகர் தியாகு சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார். 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் சிவாஜியுடனான தனது அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்தார். அவர் பேசியதாவது, “சிவாஜி அப்பா எனக்கு ரொம்ப வேண்டியவர். என் மேல பாசமா இருப்பார். அவரது 24வது நினைவு நாளில் அவரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஏன்னா, அவர் என் கல்யாணத்துக்கு வந்தார், எப்போதுமே கும்பகோணத்தான்னு தான் கூப்பிடுவார். அவருடன் நான் மூணு படம் நடிச்சுருக்கேன். அற்புதமான நடிகர். 

ஒரு முறை சிவாஜி அப்பா, வி.கே ராமசாமிகிட்ட, 240 ரூபா இருக்குடா, மின்சார சுடுகாட்டுக்கு அவ்வளவு தாண்டா ஆகும்... என்னை எப்படியாவது அங்க எரிச்சுடுங்கடான்னு சொன்னார். அவர் மின்சார சுடுகாட்டுக்கு ஊர்வலமா போகும்போது நானும் விஜயகாந்தும் தான் அவரை தூக்கினோம். அற்புதமான மனுஷன். அவர் மாதிரி ஒரு நடிகர் பிறப்பது ரொம்ப கஷ்டம். மதுரையில அவர் சிலை உருவாக அழகரி அண்ணன் முக்கிய காரணம். அதே போல பாண்டிச்சேரில சிலை திறந்தோம். அதுல என் பேர் இருக்குறது எனக்கு பெருமை. இன்னைக்கு அவர் சிலைய பார்க்கும் போது அவர நேருல பார்க்குற மாதிரியே இருக்கு” என உருக்கமாக கண்கலங்கியபடியே பேசினார்.  

பின்பு அவரது உடல் நலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என் ஆருயிர் நண்பன் விஜயகாந்த் போனதுல இருந்தே என் உடம்பும் போய்டுச்சு. கரோனா எல்லாத்தையும் படாதபாடு படுத்திடுச்சு. விவேக்கும் போய்ட்டான். அதுல இருந்தே ஒரு பயம் வர ஆரம்பிச்சுடிச்சு. என் கால் ஃப்ராக்சர் ஆயிடுச்சு. அதனால கவனமா இருக்கேன்” என்றார்.