உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை 52 லட்சம் பேரை நெருங்கியுள்ளது. உலகமே கரோனாவின் பிடியில் இருந்து மீள்வது எப்படி எனத் தெரியாமல் தவித்து வர இந்தியாவில் நான்காவது முறையாகச் சில தளர்வுகளுடன் தேசிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.
மூன்று மாதங்களாகப் பல துறைகள் முடங்கியதுபோல சினிமா துறையும் முடங்கியுள்ளது. முதலாம் கட்ட ஊரடங்கிலிருந்து நடிகர்கள், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அல்லது நிதி கொடுத்து உதவி வந்தார்கள். ஏனினும் சம்பளமின்றி துணை நடிகர்கள், தினக்கூலி சினிமா பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர்.
தற்போதுதான் இறுதிக்கட்ட பணிகளை நிபந்தனைகளுடனும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்குச் சில நிபந்தனைகளுடனும் அனுமதி வழங்கியுள்ளது தமிழ் மற்றும் கேரள மாநில அரசுகள்.
இந்நிலையில் கரோனா காரணமாக பட வாய்ப்பின்றி நடிகர் ஒருவர் தெருவில் பழம் விற்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ள செய்தி பலரையும் உலுக்கியுள்ளது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள 'ட்ரீம் கேர்ள்' படத்தில் நடித்துள்ள சோலங்கி திவாகர்தான் பட வாய்ப்புகள் இன்றி தெருக்களில் பழம் விற்கும் தொழிலில் ஈடுபட்டு தனது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்.
இதுகுறித்து ஏ.என்.ஐ. தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காகப் பழம் விற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.