ADVERTISEMENT

"இவர் வாலிக்கும் நாகேஷுக்கும் சோறுபோட்டவர்..." ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்!

01:04 PM Oct 13, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று (12.10.2021) காலமானார். 1965ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில், 82 வயதான ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து, அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது அருமை நண்பர் திரு. ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து,கே. பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர், ‘மேஜர் சந்திரகாந்த்’ என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக்கொண்டு நடித்தார். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்டபோது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ , ‘ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார். என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை’, ‘சிட்டுக் குருவி’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அன்னக்கிளி’, ‘யாருக்கும் வெக்கமில்லை’, ‘நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். அன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த், லீலாவதி, மீரா கணவர் அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்திவந்தேன். இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT