suriya

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள்மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகுமார் மூவரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இதையடுத்து, சிவகுமார் குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.