தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், திரைத்துறையில் ஈட்டும் தனது வருமானத்தின் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். குறிப்பாக நம்மாழ்வாரின் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வந்த நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி, பலரது பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில், தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வமைப்புகள் இணைந்து நடத்தும் ‘பாரம்பரிய வேளாண் திருவிழா’வில் சிவகார்த்திகேயனுக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, சிவகார்த்திகேயனுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.