Skip to main content

"அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்" - பூனம் பஜ்வா

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

actor ramki speech at guru moorthy audio launch

 

ஃப்ரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூனம் பஜ்வா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும்  நடிகர் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். 

 

விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

நடிகர் நட்டி பேசுகையில், “ஒரே நாளில் நடக்கும் கதை தானே சிட்டிக்குள்ளேயே இந்தப் படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்கத் தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டிவிட முடியுமா என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார்" எனப் பேசினார்.

 

நடிகை பூனம் பஜ்வா பேசும்போது, “இந்தப் படத்தில் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்குப் பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கும் நல்ல மனிதர்” என்றார்.

 

நடிகர் ராம்கி பேசும்போது, “25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்