Skip to main content

"எம்.ஜி.ஆரிடம் இருந்தது கொடுத்தார்... எங்கிட்ட என்ன இருக்கு?" - மறக்கமுடியாத சிவாஜிகணேசன் நினைவுகள்! - நடிகர் ராஜேஷ்

Published on 21/07/2020 | Edited on 01/10/2020
sivaji ganesan

 

தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடக நடிகராக அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் இவர் செய்த சாதனைகள் அளப்பரியது. பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது என அவர் வென்ற விருதுகள் ஏராளம். சிவாஜி கணேசனுடனான தன்னுடைய அனுபவங்களை நடிகர் ராஜேஷ் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

 

"ஒரு பொருள் மனிதனுடைய அன்பை வெளிப்படுத்தும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. நான் ஒரு முறை சிவாஜி கணேசனிடம் "அண்ணே உங்க நினைவாக ஒரு பொருள் கொடுங்கள்" என்றேன். எங்கிட்ட என்ன இருக்கு? இந்தப் பழைய வேட்டிதான் இருக்கு... வேண்டுமென்றால் வாங்கிவிட்டுப் போ என்றார். நான் எம்.ஜி.ஆரிடம் இதே போல் கேட்டு, அவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு கருவியைக் கொடுத்தார். அதை சிவாஜி அண்ணனிடம் சொன்னேன். "அவர் உடற்பயிற்சி பண்ணுவார், கொடுத்திருக்கிறார். எங்கிட்ட என்ன இருக்கு?" என்றார். நான் அடுத்து கேட்கவில்லை. ராம் என்ற பேராசிரியர்   ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் உடனே "நீங்க தொடர்ந்து கேட்கிறீங்களானு அண்ணன் உங்களை சோதிக்கிறார்... நீங்க விடாமல் கேளுங்கள்" என்றார். "அண்ணே கொடுக்குறேன்னு சொன்னீங்க" என அவரை பார்க்கிற இடங்களில் எல்லாம் கேட்பேன். "நான் எப்போது சொன்னேன்?" என்பார். பின் ஒரு நாள் வீட்டிற்கு அழைத்தார். மறுநாள் வீட்டிற்கு போனேன். 1955ல் வாங்கியது என்று சொல்லி அவருடைய வாட்ச் ஒன்றைக் கொடுத்தார். அதுவொரு நெகிழ்வான தருணம்.

 

actor rajesh

 

சிவாஜி அண்ணனுக்கு அசாத்தியமான நினைவாற்றல் உண்டு. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிப்பதற்காக 65 பக்கமுள்ள வசனத்தை வெறும் இரண்டு மணிநேரங்களில் மனப்பாடம் செய்துவிட்டார். நம்முடைய நடையிலேயே எல்லாத்தையும் புரிந்து கொள்வார். படிப்பு குறைவாக இருந்தாலும் அவருடைய அனுபவம் மிகவும் அதிகம். என்னுடைய வெற்றி மற்றும் சமூகத்தில் எனக்கு இருக்கும் மரியாதை எல்லாம் சிவாஜி அண்ணனை நான் பின்பற்றியதால் கிடைத்த பரிசு என்றுதான் நினைக்கிறேன். ஏதாவது நாளிதழில் என்னுடைய பேச்சுக்கள் வந்திருந்தால் அடுத்த முறை பார்க்கும் போது அதை நினைவில் வைத்து சொல்லுவார். அதுவெல்லாம் ரொம்ப மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கும்.

 

அவர் உடல்நிலை சரியில்லாத போது வீட்டிற்கு பார்க்கச் சென்றேன். அவர் அறைக்குள் நுழைந்தவுடன் 'அழக் கூடாது' என்று சைகையில் சொன்னார். 'நீயும் உன் பொண்டாட்டி பிள்ளைகளும் நன்றாக இருப்பீங்க' என்றார். எனக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. வாழ்வின் விளிம்பு நிலைக்கு வந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்டேன். அவருடைய விருந்தோம்பல் பண்பு அவ்வளவு சிறப்பானதாக இருக்கும். அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது கூட முகமலர்ச்சியுடன் வரவேற்றார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு உயரத்தில் இருந்தபோதும் தன்னைத்தேடி ஒருவர் வருகிறார் என்றால் அவரை மதிக்கக்கூடிய சுபாவம் நிறைந்தவர் சிவாஜி கணேசன்."

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ, அன்றைக்குத் தான் என் மரணம்" - பாரதிராஜா

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

bharathiraja about muthal mariyaathai movie re release and sivaji

 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல் மரியாதை'. ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர். 

 

இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு திரையரங்கிற்கு சென்ற பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. சினிமா என்பது பெரிய கலை மற்றும் பொக்கிஷம். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது அண்ணாந்து பார்த்து வியந்து எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதற்கும், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கற்றுக் கொண்டதற்கும் காரணமானவர் ஒரே ஒரு மனிதன் நடிகர் சிவாஜி கணேசன் தான். சிவாஜி இல்லையென்றால் பாரதிராஜா இல்லை. இன்றளவும் என்னை நடிக்க அழைக்கிறார்கள் என்று சொன்னால் சிவாஜி போட்ட பிச்சை. 

 

இப்படத்திற்கு முதல் மரியாதை என தலைப்பு வைக்கப்பட்டது என பலருக்கு சந்தேகம். என் வாழ்க்கையில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் என யார் யாரையோ கும்பிட்டுள்ளேன். எங்க அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கொடுத்துள்ளேன். ஆனால் திரையுலகில் நுழைந்து என்னை வாழ வைத்த தெய்வம் சிவாஜி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அதை செய்தேன். 50 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது முதல் மரியாதை.

 

இன்றைக்கும் என் முன்னால் நிறைய மைக்குகள் இருக்கின்றன. என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ அன்றைக்கு தான் என் மரணம். உங்கள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். வாழ்வேன். இன்னும் நீண்ட காலம் வாழ்வேன்" என்றார்.    

 

 

Next Story

"பராசக்தி படத்தைப் பார்த்தபோது அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது" - வெற்றிமாறன்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

vetrimaaran speech at 70 Years of Parasakthi function

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் சிவாஜி நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், 1952 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பராசக்தி'. இப்படம் வெளியாகி 70 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் சிறப்பு திரையிடலோடு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 

நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், "நம்ம தமிழ் சினிமா சூழலில் அல்லது தமிழ்நாட்டுச் சூழலில் சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க நினைப்பவர்கள், அவர்களுக்கு சிறந்த 5 படங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனும் சொல்லும் பட்சத்தில், அதில் பராசக்தி கண்டிப்பா ஒரு படமாக இருக்கும். இப்படத்தைப் பார்த்தபோது அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி மக்களுக்குப் பெரிய பலனைக் கொடுக்காது என்ற அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது.

 

எல்லா நிலைகளிலும் எளிய மனிதர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகச் சூழலில் பார்த்தால் சாதிய அடிமைத்தனம், குடும்பச் சூழலில் பார்த்தால் பெண் அடிமைத்தனம் எனப் பல நிகழ்வுகளை சொல்லலாம். அவை அனைத்தும் இப்படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்கான தொடக்க சினிமாவாக இப்படம் இருந்தது. அப்படி ஒரு முக்கியமான படம் பராசக்தி. 

 

இன்றளவும் இப்படம் பொருந்திப் போகுது. அதே சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவை அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நிறைய விஷயங்கள் இருக்கு. இப்படம் இன்னும் 30 வருடம் 50 வருடம் கழித்தும் தொடர்புடையதாக இருக்கும். இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. 70 வருடம் கழித்து அதைக் கொண்டாட வேண்டிய இடத்தில் இருக்கோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.