Skip to main content

 உயிரோடு இருக்கும் போதே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்

Published on 29/05/2025 | Edited on 29/05/2025
actor Rajesh built his own tomb while he was still alive

திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து  தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். 

இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில் ராஜேஷ், கலைப் பயணம் உட்பட அவரது ஆற்றல் வாய்ந்த அனுபவத்தை கௌரவிக்கும் வகையில் நக்கீரன் சார்பாக ‘ராஜேஷ் சார் 75’ என்ற பெயரில் விழா நடத்தியிருந்தோம். அதில் தனக்கான கல்லறையை தானே கட்டிமுடித்திருப்பதாக கூறியிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவர் கூறியதாவது, “நான் லண்டனுக்கு சென்ற போது கார்ல் மார்க்ஸ் கல்லறைக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அதைப் போலவே எனக்கும் ஒரு கல்லறையை எனது 40 வயதில் கட்டியிருக்கேன். இதற்கு முன்பு முதலில் மார்பளவு கட்டியிருந்தேன். அது இடிந்துவிட்டது. இப்போது கிரைனைட் கற்களில் கட்டிமுடித்திருக்கிறேன். இதை கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். அவர்தான், உயிரோடு இருக்கும் போதே அவருக்கு கல்லறையை கட்டி, பின்பு 27 வருஷம் கழித்து இறந்தார். 

தனக்கு எவன் கல்லறை கட்டுகிறானோ அவன் நூறு ஆண்டுகள் வாழ்வான் என சீன பழமொழி ஒன்று உண்டு. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இறந்த பின்பு என்னுடைய கல்லறை இப்படி இருக்க வேண்டும் என என் பசங்களுக்கு எப்படி நான் சொல்ல முடியும். அவங்களுக்கு அதற்குலாம் நேரம் இருக்மோ இல்லையோ எனத் தெரியவில்லை. அதனால்தான் நானே பைபில் வசனம் உள்ளிட்ட நிறைய விஷயங்களை குறிப்பிட்டு எனக்கு நானே கல்லறை கட்டி முடித்துவிட்டேன். அதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்றார்.  

சார்ந்த செய்திகள்