Skip to main content

குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய பிரசன்னா! 

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

prasanna

 

 

கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் மாயாபஜார் 2016. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் சுந்தர்.சி பெற்றார். லாக்டவுன் முடிந்து தமிழ்ப் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியவுடனே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில் முடிக்கப்பட்டது.

 

பிரசன்னா, யோகி பாபு, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை பத்ரி இயக்கியிருந்தார். ஒரே மாதத்தில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு, ரிலீஸுக்கு தயாரானது. திரையரங்கம் மற்றும் ஓடிடியிலேயே இதுவரை நேரடியாக படங்கள் வெளியாகி வந்த நிலையில் நேரடியாக சாட்டிலைட் டிவி சேனலில் இப்படம் வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரசன்னா, ஷூட்டிங்கின்போது ஒரு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறார். மருத்துவமனையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது ஒரு தம்பதியர் பிரசன்னாவை சந்தித்துள்ளனர். அவர்களோ புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என நினைத்து, புகைப்படம் எடுத்துள்ளார் பிரசன்னா.

 

அந்த சமயத்தில் தங்களுடைய குழந்தையின் இதய அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களைக் கூறியுள்ளனர். மேலும், அந்த சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய குழந்தையின் விவரங்கள் அனைத்தையும் கேட்டு வாங்கியுள்ளார் பிரசன்னா.

 

பின்பு தனக்குத் தெரிந்த மருத்துவர்கள் மூலமாக விசாரித்து, குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு 1.5 லட்ச ரூபாய் உதவி செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது, பிரசன்னாவின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்