ADVERTISEMENT

ஹீரோவா 18 படம் புக்காச்சு.... ஒரே விபத்துல எல்லாம் போச்சு... பாரதிராஜா பட ஹீரோவின் கண்ணீர் கதை! 

03:25 PM Jan 12, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர்த் தோழன்' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பாபு.

நடிகர், வசனகர்த்தா எனப் பன்முக ஆளுமை கொண்ட பாபுவிற்கு முதல் படமே பெரிய அளவில் கை கொடுத்ததால் அடுத்த ஆறு மாதங்களிலேயே 18 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பகல், இரவு எனப் பாராது தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த பாபு, படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்திக்கிறார். ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக, படுத்த படுக்கையாக இருக்கும் இவர், தற்போது பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளார். அவருக்கு உதவிடும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுத்துவரும் நடிகர் பொன்வண்ணனைச் சந்தித்தோம். நடிகர் பாபுவுடனான தன்னுடைய நெருக்கம் குறித்தும் பாபுவின் தற்போதைய நிலை குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...

" 'கொடி பறக்குது' படம் முடிவடைந்திருந்த சமயத்தில், இயக்குனர் பாரதிராஜாவிடம் கதை சொல்வதற்காகச் சென்றேன். அவர் என்னிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து கொள்கிறாயா? எனக் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். அப்போது பாபு என்ற ஒருவரைச் சந்திக்கச் சொன்னார். நானும் போய் அவனைச் சந்தித்தேன். எங்களுக்கு இடையேயான முதல் அறிமுகம் இப்படித்தான் ஏற்பட்டது. கலைமணி சார் கதையில் பாரதிராஜா இயக்கிய 'என் உயிர்த் தோழன்' படத்திற்காக அந்தச் சந்திப்பு நடந்தது. மெட்ராஸ் பேச்சுவழக்கு பாபுவிற்கு சரளமாகத் தெரியும் என்பதால், அந்தப்படத்திற்கு அவன் வசனம் எழுதினான். அந்த காலகட்டத்தில் அவனுடன் இணைந்து பணியாற்றினேன். சில நாட்கள், அவன் வீட்டில் அமர்ந்து வசனம் எழுதுவோம். அதன் மூலமாக அவன் குடும்பம் எனக்கு அறிமுகமானது.

பாரதிராஜா திடீரென ஒருநாள், இவன்தான் நம்ம படத்துக்கு ஹீரோ என்றார். பாபு அந்தச் சமயத்தில் எலும்பும் தோலுமாக இருப்பான். இவனை எப்படி ஹீரோவா நடிக்க வைப்பார் என ஆச்சரியமாக இருந்தது. அதன்பிறகு, ஆறு மாதத்திற்குக் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டான். அந்தச் சமயத்தில் நாங்கள் மிக நெருக்கமாகப் பயணித்தோம். 'என் உயிர்த் தோழன்' படத்திற்குப் பிறகு அவனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. படம் தோல்வியடைந்தாலும் பாபுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால் நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாகச் சந்தித்துக் கொள்ளவில்லை.

பொள்ளாச்சியில் அவனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது எனப் பின்னாட்களில் பத்திரிகை செய்திகள் மூலம் தெரியவந்தது. அதுகுறித்து விசாரிக்கையில், சண்டைக்காட்சியின் போது தவறி விழுந்துவிட்டதாகக் கூறினார்கள். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் போது அவனைச் சந்தித்தோம். சில மாத சிகிச்சைக்குப் பிறகு ஆரம்பக்கட்டங்களில் எழுந்து நடக்கக் கூடிய அளவிற்கு குணமானான். 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவனைச் சந்தித்தேன். அப்போது படுத்த படுக்கையாக இருந்தான். அவனுடைய அப்பா வங்கியில் வேலை பார்த்ததால் அவனுக்குப் பொருளாதார உதவிகளைத் தொடர்ந்து செய்துவந்தார். அவரது ஓய்விற்குப் பிறகு பணத்தை எல்லாம் ஒரு சிட்பண்டில் முதலீடு செய்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அதில் ஏமாற்றப்பட்டு எல்லாப் பணத்தையும் அவர் அப்பா பறிகொடுத்துவிட்டார். அதன் பிறகு அவர் தம்பி மட்டுமே பாபுவையும் அவரது அப்பாவையும் கவனித்து வந்தார். பின்னர் அவனது தம்பியும் இறந்துவிடுகிறார். இவையனைத்தையும் படுத்த படுக்கையாக இருந்த பாபு பார்த்துக்கொண்டே இருந்தான். பொருளாதாரப் பின்னடைவும் உறவுகள் பிரிவும் தொடர்ந்து அவனுக்கு நடந்தது. எந்த உதவியும் இல்லாமல் அந்தக் குடும்பம் இருக்கிற விஷயம் தெரிந்து பலர் உதவி செய்தனர். ஒரு கட்டத்தில் அது எதுவும் போதவில்லை. அவனுடைய நண்பர்கள் உதவியால் சில வருடங்கள் கழிந்தன. கடந்த 25 வருட காலத்தில் அவனை வெவ்வேறு கட்டங்களில் பார்த்துள்ளேன். தற்போது அனைத்தையும் இழந்து நடைப்பிணம் மாதிரியான நிலையில் உள்ளான்.

குணமடைந்து மீண்டு வந்துவிடவேண்டும் என்பதெல்லாம் அவனது நோக்கமில்லை. வாழுகிற காலம் வரை அடிப்படை வாழ்க்கையை வாழ்வதற்கான பொருளாதார உதவிகள்தான் அவனது தற்போதைய தேவை. வீட்டு வாடகை, உணவு, மருத்துவச் செலவு என மாதம் 50,000 வரை நிரந்தரப் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இதைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில்தான் தற்போது இறங்கியுள்ளோம். இயக்குனர் பாரதிராஜா, ஐ.ஏ.எஸ். பாலகிருஷ்ணன் உட்பட பலரும் உதவிசெய்து வருகின்றனர். திரையுலகம் மட்டுமின்றி மனிதாபிமானம் உள்ளவர்கள், அறக்கட்டளை நடத்துபவர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் பெற முயல்கிறோம்.

100 பேர் 500 ரூபாய் கொடுத்தால் இதை எளிதாக எட்டிவிடலாம். அப்படி ஒரு நூறு பேர்கள் கிடைக்கமாட்டார்களா என்று நினைத்துத்தான் இந்த முயற்சி எடுத்துள்ளோம். இந்த உதவி கிடைத்தால் படுத்த படுக்கையாக இருந்துகூட தன்னுடைய வாழ்க்கையை அவன் கடந்துவிடுவான். நம்மிடம் உள்ள மனிதாபிமானத்தைத் தக்க வைத்துக்கொள்ள மற்றும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளச் சிறு வாய்ப்பாக நினைத்து இந்த உதவியைச் செய்வோம். நீங்கள் செய்கிற சிறு உதவி அந்த உயிரை இந்தப் பூமியில் வாழுகிற காலம் வரை நம்பிக்கையுடன் வாழ வைக்கும்.

உதவி செய்ய விரும்புவோருக்கு...

S. PREMALATHA
A/c 10013287586
State Bank of India
Santhome Highroad Branch
IFSC - SBIN0005797

Mobile No: +91 9597224400

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT