ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து, பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் நிழல். 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பார்த்திபன், ”சினிமா எடுப்பதற்கு என்னிடம் பணம் கிடையாது. ஆனால், நிறைய ஆர்வம் உண்டு. இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புவேன். அப்போதுதான் சினிமா என்ற சரித்திரத்தில் நான் இடம்பெற முடியும். இது எனக்கு இருக்கும் மிகப்பெரிய பேராசை.
இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம். இவ்வளவு கர்வத்துடன் இதை நான் சொல்வதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. எனக்கு நான்கு நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்று மேடையில் பேசும்போது சொன்னேன். ஆனால், வட இந்தியாவில் இருந்து அபிஷேக் பச்சன் என்ற ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். என்னுடைய ஒத்த செருப்பு பட இந்தி ரீமேக்கில் அவர் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவுள்ளது.இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அபுதாபியில் இருந்து வந்திருக்கிறார். இந்த நட்புக்கு நான் எப்படி கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. இந்தப் படத்தை ஊடகங்கள் மக்களிடம் பெரிய அளவில் கொண்டுசெல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.