‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராகத்திரையில் தோன்றி பார்த்திபன் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதை இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் பார்த்திபனின் முகநூல் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபனின்முகநூல் பக்கம் சரிசெய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "முழுச்சிகிட்டிருக்கும் போதே கண்ணப் புடுங்கி காயலாங்கடையில வித்துட்டுப் போயிட்றாங்க - பேட் ஹேக்கர்ஸ். கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி - எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ? ’இரவின் நிழலில் நான் எழுதிய பாடல் வரிகள். திரும்ப கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி. இனி இனிதே நட்பு தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.