Skip to main content

சிவாஜி மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்... பாண்டுவை திட்டிய எம்.ஜி.ஆர்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

pandu

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பாண்டு, இன்று (06.05.2021) காலை மரணமடைந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். வெறும் காமெடி நடிகராக மட்டுமே பாண்டுவை அறிந்த ரசிகர்களுக்கு அவரது பிற பக்கங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

அடிப்படையில் ஓவியரான பாண்டுவிற்கு உலகறிந்த ஓவியராக வேண்டும் என்பதே ஆசை. அதற்காக ஓவியம் சார்ந்த பணிகளில் எப்போதும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவந்தார். அதே காலகட்டத்தில் பாண்டுவின் சகோதரர் இடிச்சப்புலி செல்வராஜ் சினிமாவில் காமெடி நடிகராகவும் எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும் செயல்பட்டுவந்தார். ஒருமுறை எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் ஒப்பிட்டு பாண்டு வரைந்த ஓவியம், பாண்டுவிற்கு எம்.ஜி.ஆருடனான நெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அந்த நெருக்கம்தான் பின்னாட்களில் பாண்டு திரைத்துறையில் அறிமுகமாகச் சந்தர்ப்பம் அமைத்துக்கொடுத்தது.

 

அதுபற்றி ஒரு பேட்டியில் பாண்டு கூறுகையில், "நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். அதை மையப்படுத்தி வித்தியாசமாக ஓர் ஓவியம் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 'நூறு சிவாஜி ஒரு எம்.ஜி.ஆருக்குச் சமம்' என்பதை அடிப்படையாக வைத்து, நூறு சிவாஜி புகைப்படத்தை ஒட்டி எம்.ஜி.ஆர் உருவத்தைச் செய்தேன். அதை அருகில் வைத்துப் பார்த்தால் சிவாஜியின் நூறு புகைப்படம் தெரியும். சற்று தள்ளிவைத்துப் பார்த்தால் எம்.ஜி.ஆர் உருவம் தெரியும். அதை நான் எம்.ஜி.ஆரிடம் காட்ட ஆசைப்பட்டேன். ஆனால், எம்.ஜி.ஆரைச் சந்திப்பது அவ்வளவு எளிதல்ல என்று என் அண்ணன் கூறிவிட்டார். பின், அந்த உருவத்தின் புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. நிறைய சிவாஜி ரசிகர்கள் என்னைத் திட்டி கடிதம் அனுப்பினார்கள். கடைசியில் அது எம்.ஜி.ஆரின் கவனத்திற்கும் சென்றது. படப்பிடிப்புத் தளத்தில் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அந்தப் பத்திரிகை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இந்த ஓவியத்தை வரைந்த பாண்டு யாரென விசாரியுங்கள் எனக் கூறியுள்ளார். அங்கே இருந்த என் அண்ணன், என் தம்பிதான் வரைந்தான் எனக் கூறியுள்ளார். அவனை நாளை தோட்டத்தில் வந்து என்னைச் சந்திக்கச் சொல் என எம்.ஜி.ஆர். கூறிவிட்டார்.

 

நாம் சந்திக்க நினைத்த எம்.ஜி.ஆர், தற்போது நம்மை வந்து சந்திக்கச் சொல்கிறாரே என எனக்கு ஒரே மகிழ்ச்சி. மறுநாள் நேரில் போய்ச் சந்தித்தேன். முதலில் ஓவியம் சிறப்பாக இருந்தது எனக் கூறி பாராட்டிய எம்.ஜி.ஆர், பின் இந்த ஓவியம் எனக்கு மனவருத்தத்தைத் தந்தது எனக் கூறினார். சிவாஜி கணேசன் எவ்வளவு பெரிய நடிகர் என்று உனக்குத் தெரியுமா... அவர் நடிப்பிற்கு முன் நான் ஈடாக முடியுமா... நூறு சிவாஜி ஒரு எம்.ஜி.ஆர் என எந்த ஐடியாவில் நீ இதைப் பண்ண... அவர் மனம் எவ்வளவு வருத்தப்பட்டிக்கும்... ஒருத்தர் மனதை வருத்தி நல்ல பெயர் வாங்குவது நல்லாயில்ல எனக் கடிந்துகொண்டார். அவரிடமிருந்து எப்படியாவது பாராட்டுப் பெற்றுவிட வேண்டுமென்று, அவருடன் நடித்த நூறு கதாநாயகிகளின் புகைப்படங்களை வைத்து இதே ஐடியாவில் எம்.ஜி.ஆர் உருவம் செய்து, ஒரு வாரங்கழித்து எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். எம்.ஜி.ஆருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பாராட்டுனா இப்படித்தான் வாங்கணும் என்று கூறி ஒரு தங்கச்செயின் பரிசாக அளித்தார்" எனக் கூறினார்.   

 

அதன் பிறகு, எம்.ஜி.ஆரிடம் நெருக்கமான பாண்டு, அவருடைய பல படங்களுக்குப் பெயர் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். பாண்டுவின் ஓவியத்திறமையை எம்.ஜி.ஆர் எந்த அளவிற்கு ரசித்துள்ளார் என்பதற்கு உதாரணம், திமுகவில் இருந்து விலகி 1972இல் தனிக்கட்சி தொடங்கியபோது கட்சிக்கான கொடியையும் சின்னத்தையும் வடிவமைக்கும் மிக முக்கியமான பொறுப்பை பாண்டுவிடம் ஒப்படைத்ததில் இருந்து அறியலாம். இன்று அதிமுகவின் சின்னமாக உள்ள இரட்டை இலையும் அதிமுகவின் கொடியும் பாண்டு வடிவமைத்ததே.

 

மேலும், கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற பெயர் பலகைகள் எழுதும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு தற்போதுவரை பெயர் பலகை வடிவமைத்துக் கொடுத்துவந்தார். மெட்டலில் லெட்டர் போர்டு வைப்பதை பாண்டுதான் சென்னையில் அறிமுகம் செய்ததாகவும், இன்று பெரும்பாலான பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலக வாசல்களில் உள்ள பலகைகள் பாண்டு வடிவமைத்ததுதான் என்றும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.