nedumudi venu

பிரபல மலையாள நடிகரான நெடுமுடி, தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பத்திரிகையாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய நெடுமுடியின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால். சினிமாவிற்காகத் தன்னுடைய பெயரை நெடுமுடி வேணு என மாற்றிக்கொண்ட இவர், 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்.

Advertisment

குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நெடுமுடி வேணுவுக்கு மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நெடுமுடி வேணு, அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்திருந்தார். நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று காலை தகவல் வெளியான நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து, அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

500 திரைப்படங்களுக்கும்மேல் நடித்துள்ள நெடுமுடி வேணு, மூன்று தேசிய விருதுகளையும் 6 கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.