இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் திரைபிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருந்ததால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த மகேஷ்பாபு, சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கூறியுள்ளார்.