
போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி அதிமுக முன்னாள் பிரமுகர் பிரதீப் குமார் என்பவரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் அவருக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜான் என்பவரை ஓசூரில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் நடந்த விசாரணையில் யார் யாருக்கெல்லாம் போதைப் பொருள் வழங்கியது குறித்து அவர்கள் சொல்லியுள்ளனர். அதில் நடிகர் ஸ்ரீகாந்த் பெயரும் இருந்ததால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். பின்பு அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந் நடித்த ‘தீக்கிரை’ படத்தின் தயாரிப்பாளர் ஒருவராக இருந்துள்ளார் பிரதீப். அப்போது படம் தொடர்பான பார்ட்டியில் பிரதீப், ஸ்ரீகாந்துக்கு கொகைன் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போலீஸார், எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி தயாளன் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதை ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டார். அதே சமயம், தான் போதைப் பொருளை பயன்படுத்தி தவறு செய்து விட்டேன் எனவும் தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் சில காரணங்களை குறிப்பிட்டு ஜாமீன் கேட்டுள்ளார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘ஜாமீன் வேண்டுமென்றால் நீங்கள் சிறப்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்' எனத் தெரிவித்து ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்னொரு தமிழ் நடிகரும் போதைப்பொருள் உட்கொண்டதாக நேற்று தகவல் வந்த நிலையில் தற்போது நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கிருஷ்ணா கழுகு, மாரி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். இவர் இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் ஆவார். இவருக்கு காவல் துறையினர் போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.