Skip to main content

"விவசாயத்தில் ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறது" - கார்த்தி

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

actor karthi talks about farmers current issue 

 

சென்னையில் நடிகர் கார்த்தி ஒருங்கிணைத்த உழவன் விருது வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசியதாவது, "நான் உழவன் அறக்கட்டளை ஆரம்பித்த புதிதில், விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  விவசாயம் சார்ந்த விழா மேடையில் இருந்த போது,  விவசாயம் சார்ந்து 30 முதல் 40 ஆண்டுகள் பணி செய்தவர்களை அழைத்து இருந்தார்கள் நான் அங்கு சிறப்பு விருந்தினராக  உட்கார்ந்து இருக்கிறோம் என்று கூச்சமாக இருந்தது. இவர்கள் தானே நாயகர்கள். இவர்களை தானே நாம் சிறப்பிக்க வேண்டும் பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஒட்டு மொத்தமாக விவசாயிகள் மீதான மரியாதையும், அவர்களை பற்றிய நமக்கான அறிவும் நம்மிடம்  கம்மியாக இருக்கிறது. விவசாயிகள் பரிசுகளுக்காக எல்லாம் இதை செய்யவில்லை. விவசாயம் என்பது அத்தியாவசியம்.

 

விவசாயம் செய்பவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி இருப்பவர்களை நாம் தான் அடையாளப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட  ஒரு மொழியை இழந்து விட்டால் ஒரு கலாச்சாரமே இல்லாமல் போய் விடும். அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட விதையை இழந்து விட்டால் அதனை  மீண்டும் உருவாக்க முடியாது. அத்திவாக்கம் பெண்கள் கூட்டமைப்பு   குத்தகைக்கு நிலம் வாங்கி,  கடன் வாங்கி கிணறு வெட்டி விவசாயம் செய்து, அதன்மூலம் குத்தகை கடனை அடைத்து இன்று ஊரே அவர்களை அண்ணாந்து பார்க்கிறது. இவர்களை அங்கீகரிக்கும் போது இது மாதிரி ஆர்வம் இருக்கிறவங்களுக்கு  ஆர்வம் வரும். இதனை பற்றிய அறிவு மக்களிடம் சென்றடையும்.  இதனை ஆணித்தரமாக நம்புகிறோம்.மாதிரி ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். கோத்தகிரியில் உள்ளவர் எங்களை எப்படி தேடி கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை என்று சொன்னவர். இன்று லண்டனில் துபாயில் கடை வைத்து இருக்கிறேன் என்று சொன்னார்.  இன்னொருவர் எங்களை தேடி ஆட்டோகிராப்  கேட்கிறார்கள் என்றார். இதனால் தான உழவன் அறக்கட்டளை தொடர்ந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

விவசாயிகளை பற்றி  நுகர்வோராக நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.  நம்முடைய குழந்தைகளிடம் உணவை வீணாக்க வேண்டாம் என்று சொல்லி கொடுக்கிறோம். ஆனால் உணவு எங்கிருந்து வருகிறது என்று சொல்லி  கொடுக்கிறோமோ. முன்பெல்லாம் மளிகை கடையில் இருந்து உணவு வருகிறது என்று குழந்தைகள் சொன்னார்கள். இந்த தலைமுறை குழந்தைகள்  ஸ்விக்கி ஸொமாட்டோ என்று சொல்கிறார்கள்.  அக்ரிகல்சுரல் விசிட் சில பள்ளிகளில் மட்டுமே நடைபெறுகிறது.  சில பள்ளிகளில் விவசாயம் சார்ந்த பாட வேளை இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று அணைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும்.

 

என்றைக்கோ தக்காளி நூறு ரூபாய் விற்றால் அன்றைக்கு அது பெரிய விசயமாகி விடுகிறது. ஆனால் அதே தக்காளி 5 ரூபாய்க்கு விற்றால் விவசாயிக்கு எவ்வளவு கிடைக்கும் என்று யோசிப்பதில்லை.பாட்டில் தண்ணீர் விலை ஏறினால்  நாம் கேட்பதில்லை. ஆனால் பால் விலை ஏறினால்  கேட்கிறோம். ஒரு பொருளின் விலைவாசி ஏறினால் அந்த விலை ஏற்றம் யாருக்கு செல்கிறது என்று பார்க்க வேண்டும். நெல் விளைய எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நம்மாழ்வார் அய்யா பெரும் பெரிய புரட்சி செய்து விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இயற்கை இடறினால் இந்த பட்டத்தில் இது  விதைத்தால் நன்றாக வளரும் என்ற அறிவு எல்லாம் வீணாகிப் போகிறது.  விவசாயத்தில் ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபடுமா என்று தெரியவில்லை.

 

இந்த வருடம் உலகம் முழுவதும்  சிறுதானியங்கள்  ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.  சிறுதானியங்கள் எல்லாம் மானாவாரி பயிர் ஆகும். இன்னைக்கு சிறுதானியங்கள் எல்லாம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகத் தான் கிடைக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் மிகவும் கம்மியாகத் தான் இருக்கிறது. விவசாயி தனது விலை பொருளை விற்கும் சந்தை ரெண்டு மணி நேரம் தான் செயல்படுகிறது. விளைபொருட்களை விடியற்காலை கொண்டு செல்ல ஒரு போக்குவரத்து தேவைப்படுகிறது அதனை செயல்படுத்த அரசு முன் வரவேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்