நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் விருமன் படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், மதுரை மக்கள் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு நெகிழ்ச்சியான பதிவினைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "விருமன் படப்பிடிப்பிற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வந்துள்ளேன். பருத்தி வீரன் படம் பற்றி மக்கள் இன்னும் பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மக்களின் அன்பும் அரவணைப்பும் மாறாதவையாக உள்ளன. ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் நன்றிக்கடன் பட்டவனாகவும் உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.