
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்து மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.
இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேசப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், கிருமி நாசினி இருந்ததும் தெரிய வந்தது. அதேவேளையில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் வேறுமாதிரி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும், நடன கலைஞருமான ராமகிருஷ்ணன் நேற்றிரவு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ராமகிருஷ்ணன். அவர் அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயன்றுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.