Skip to main content

"வெற்றிமாறனிடம் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டேன்..." ஆடுகளம் நினைவுகளைப் பகிரும் ஜெயபாலன்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

jayabalan

 

கவிஞர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத்தன்மையுடன் திகழும் ஜெயபாலன் அவர்களோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் கலந்துரையாடினோம். அதில், பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவருடன் நாம் நடத்திய கலந்துரையாடல் பின்வருமாறு...

 

'ஆடுகளம்' வெளியானபோது புதிய வகை வில்லத்தனத்தை ஜெயபாலன் கையாண்டு இருக்கிறார் என விமர்சனங்கள் எழுதப்பட்டன. அது பற்றிக் கூறுங்கள்?

 

புதிய வகை வில்லத்தனம்... அப்படியெல்லாம் ஏதும் இல்லை. எனக்கு நடிப்புப் பற்றி எதுவுமே தெரியாது. நான் பாலுமகேந்திராவின் நண்பர். அந்த வகையில் வெற்றிமாறனுக்கு என்னைத் தெரியும். என்னை நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் நாடகங்களில் கூட நடித்ததில்லை. அதனால் மறுத்துவிட்டேன். நான் வேண்டாம் எனக் கூறியும் அவர் தொடர்ந்து கேட்டார். நீங்கள் எனக்கு நடிப்பு பயிற்சியளித்தால் நான் முயற்சிக்கிறேன். சரியாக வந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், என்னை விட்டுவிடுங்கள் எனக் கூறினேன். அப்படித்தான் அந்தப் படத்திற்குள் நான் வந்தேன். சில நடிகர்கள் அவர்களுக்கு என்று ஒரு தனி பாணி வைத்து  எல்லா படங்களிலும் அதைப் பின்பற்றுவார்கள். 'தேவர் மகன்' படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்குப் பாடப்புத்தகம். அது போல, 'முதல் மரியாதை', 'பராசக்தி' போன்ற படங்களையும் கூறலாம். சிவாஜி கணேசன், மார்லின் பிராண்டோவைப் பார்த்துதான் நடிப்புக் கற்றுக்கொண்டேன்.

 

வெற்றிமாறன், 'ஆடுகளம்' படத்தை இரண்டு வருடங்கள் படமாக்கினார். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

 

ஏதாவது ஒரு கதையை மதுரையில் கொண்டு போய் எடுத்தால் அது மதுரை படமாகிவிடாது. அது போல எடுக்க நினைத்தால் இதே படத்தை அவரால் ஆறு மாதத்திலும் எடுத்திருக்க முடியும். அந்த மண்ணைப் பற்றி முழுமையாகக் கற்றுக்கொண்டு ஆடுகளம் எடுத்தார். அந்த நேரத்தில் ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருந்தது. அச்சூழலில் அங்கு களத்தில் இருக்க முடியாமல் போனது என்னைக் கொதிப்படைய வைத்தது. அதனால், வெற்றிமாறனிடம் நாகரிகம் இல்லாமல் நடந்துகொண்டேன். 

 

sakra

 

சிவாஜி கணேசனைப் பார்த்து நடிப்பு கற்றுக்கொண்டதாகக் கூறினீர்கள். ஆடுகளம் படத்திற்காக நீங்கள் வாங்கிய ஸ்பெஷல் ஜூரி அவார்ட்டை, சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்திற்காக வாங்கியுள்ளார். அது பற்றிக் கூறுங்கள்?

 

நிறைய தோல்விகள், போராட்டங்களைச் சந்தித்த எனக்கு இது சரியான விருது என்றுதான் நினைக்கிறேன். சிவாஜி கணேசனிடம் இருந்து நடிப்பு கற்றுக்கொண்டேன் என்பது அவருக்கு இழுக்காக இருக்காது என்று நினைக்கிறேன். இன்று ஓரளவிற்கு நடிப்பில் தேறிவிட்டதாகக் கருதுவதால் இவ்வாறு கூறுகிறேன்.

 

வெற்றிமாறன் தவிர்த்து தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்தமான இயக்குநர்?

 

மாரி செல்வராஜைக் குறிப்பிடலாம். அவர், நீரோட்டத்தோடு போகாமல் எதிர்நீச்சல் போட்டவர். ஏற்றத்தாழ்வுகளை அவர் கையாண்ட விதம் பாடம் கற்பிப்பது போல உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“குறைகளோடும் தவறுகளோடும் தான் படம் எடுக்கிறோம்” - மனம் திறந்த வெற்றிமாறன்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vetrimaaran speech in  CIFF

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தொழில், விக்ரம் சுகுமாரனின் ராவணக் கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருது வாங்கிவிட்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், “எப்போதுமே இது மாதிரியான படங்கள் எடுக்கும்போது ஒரு பேலன்ஸ் இருக்கணும். சில இடங்களில் கதையில் சமரசம் பண்ணிப்போம். சில இடங்களில் ஜனரஞ்சகத்தன்மைக்காக சமரசம் செய்துகொள்வோம். என்னுடைய படங்களில் நிறைய சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால் எல்லா படங்களையுமே நிறைய குறைகளோடும் தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம். இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதே சமயம் கதையின் நோக்கம் படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்கிறது.  

இது மாதிரி கதையாடல்கள் சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த அங்கீகாரம் என நினைக்கிறேன். அடுத்தடுத்து செய்யும் முயற்சிகளில் சமரசங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சரியாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். விடுதலை மாதிரியான படத்திற்கு ஜனரஞ்சகமான ஆதரவும் திரைப்பட விழாக்களின் அங்கீகாரமும் பெரிய ஊக்கமளிக்கிறது. நோக்கம் பத்தி பேசும்போது அயோத்தி பத்தி பேச வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொடர்புபடுத்தி கொள்ளக்கூடிய ஒன்று. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் ஒரு நல்ல நோக்கத்தோடு வந்த படம். அந்த இயக்குநரின் நோக்கத்தை ஆதரித்த மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள்” என்றார்.