Skip to main content

பிஞ்ச செருப்பும் ஊக்குக் குத்துன சட்டையும் வெளிய... ஆனா உள்ள இருந்தது வேற! அதை அஜித் பார்த்தார்! 

Published on 20/07/2020 | Edited on 05/11/2020
vaali ajith simran

 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. நடிகர் அஜித்தின் சினிமா கரியரில் முக்கியப்படமான 'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். வெற்றிகரமான இயக்குனரான பின் அவரது லட்சியமான நடிப்பில் காலடி வைத்தார். அவருடைய வித்தியாசமான நடிப்பு, கலகல சிரிப்பு மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ஆரம்பக் காலகட்டங்களில் துருதுருவென காதல் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த இருந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய கடின உழைப்பினால் உயரம் தொட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பயணத்தில் ஒரு சிறிய பகுதி இது...

 

எஸ்.ஜே.சூர்யாவை இயக்குநராக அடையாளம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர் அஜித்தான். "தல அஜித் இல்லையென்றால் எஸ்.ஜே.சூர்யா இன்று இல்லை " என அவரே பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். "அஜித் சாரோட முதல் சந்திப்பு அவரோட  'ஆசை' படத்தின்போது நடந்தது. அதில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். என்னுடைய குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். அவர்களுக்கு நான் சினிமாவிற்குப் போவது பிடிக்கவில்லை. அதனால் நான் என்னுடைய சுயஉழைப்பினால் முன்னேறவேண்டும் என்று தீர்மானித்தேன். வீட்டில் பணம் ஏதும் வாங்கமாட்டேன். ஒரு வேளை நான் வெற்றி பெறாவிட்டால் வீட்டில் பணம் வாங்கி வீணாக்கி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்று அதை தவிர்த்து வந்தேன். 'ஆசை' படத்தில் வேலை பார்க்கும் போது என் சட்டையில் சில பட்டன்கள் இருக்காது. ஊக்குதான் குத்தியிருப்பேன். என்னுடைய செருப்பும் தேய்ந்து போய் அடியில் பிய்ந்திருக்கும். இதையெல்லாம் அஜித் சார் கவனித்து இருக்கிறார். "யாரு இந்தப் பையன்... எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இப்படி வேலை செய்கிறான். நாம் பெரிய நடிகரானால் இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணம்தான் பின்னாளில் 'வாலி' பட வாய்ப்பாக வந்து அமைந்தது. 'வாலி’ வெளியானபோது, அதன் மேக்கிங், பாடல்கள், க்ளாஸ் ஆகியவற்றில் தெரிந்தது, உண்மையான எஸ்.ஜே.சூர்யா யார் என்பது.

 

kushi

 

'வாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'குஷி'யும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அஜித்திற்கு எப்படி 'வாலி' மிக முக்கியமான படமோ, அது போலவே விஜய்க்கு 'குஷி' முக்கியமான காலகட்டத்தில் கைகொடுத்த திரைப்படம். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்குத் தேவையான வெற்றியை, தேவைக்கு மிக அதிகமான பெருவெற்றியை தந்தது 'குஷி'. பின் 'குஷி' தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'நியூ', அன்பே ஆருயிரே, இசை என அடுத்தடுத்த  படங்களை இயக்கினார். அதுவரை இயக்குநராகவும், நடிகராகவும் இருந்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய பரிமானம் காட்டினார். இவர் நடித்து வெளிவந்த 'இறைவி' மற்றும் சமீபத்திய 'மான்ஸ்டர்' திரைப்படம் நடிகராக இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.

 

காதல் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய பாணியை சிறிது மாற்றி ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான முகபாவனையுடனும், பின்னணி இசையுடனும் பார்வையாளர்களைத் திகிலூட்டினார். தற்போது வெங்கட்பிரபு சிம்புவை வைத்து இயக்கும் 'மாநாடு' திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். என்னதான் அன்று, அவருடைய செருப்பும் சட்டை பட்டனும் பிய்ந்து இருந்தாலும் அவருடைய நம்பிக்கையும் உத்வேகமும் உறுதியாக இருந்ததால்தான் இன்று தான் விரும்பிய இடத்தைப் பிடித்து வெற்றியாளராகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கத்திலும் அசத்துங்கள் சூர்யா...  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.